அன்பின் குருஜி,

எனக்கு ஒரு டவுட்...

இப்போ எடுக்குற படங்களாகட்டும்/எழுதுகிற எழுத்தாகட்டும் அனைத்துக்கும் இன்ஸ்பிரேஷன் எப்போதோ அவர்கள் கண்டும்/கேட்டதுமான/ அவர்களுக்கு நிகழ்ந்ததுமான நிகழ்வுகளின் மீது கட்டமைக்கும் வெளிப்பாடுதானே....

எல்லா நிகழ்வுகளும் எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவதில்லை/ஏதேனும் மிகச் சிறுநிகழ்வுகள் சிலவும் நிகழாமலும் இருப்பதில்லை.
அவ்வாறு சிறு நிகழ்வுகள் நிகழும்போது, ஆகா இது நமக்கும் நிகழ்ந்த நிகழ்வல்லவா எனக்கண்டு நெகிழ்ந்து..இரண்டுக்குமான ஒத்திசைவை பொதுவெளியில் கூறும்போது அதை பரிகாசிப்பதோ/புரந்தள்ளுவதோ இணைய விசிலடிச்சான் குஞ்சுகளின் வேலை..கிஞ்சித்தும் கவலையில்லை அவர்கள் குறித்து எனக்கு...ஆனால் உங்களை போன்ற முற்றிலும் தொறந்த...ஒஹ்..சாரி. கற்றிலும் தெளிந்த கல்வியியலாளரான தாங்களும் அதனை பரிகாசிக்கலாமோ? பரிகாசிப்பிற்கு தாங்கள் சூட்டிய நாமகரணம்....’’ஜல்லியடித்தல்’’...

இதுகாறும் உங்களின் ஆக்கங்களை கற்றறிந்தவன் என்ற மமதையில் சொல்லுறேன்....பல/தக்க சமயங்களில் நீங்கள் இத சொல்லிஇருக்கீங்க....இது தகுமே? முறையோ? நியாயமோ?...
மேலே குறிப்பிட்ட இரண்டுக்குமான உதாரணங்கள் என்னிடமே ஆதுரமான ஆதாரம் உள்ளது...

சினிமா :-

மிக சமீபமாக வந்த மூடர்கூடம் படத்தில எங்களை மிகவும் கவர்ந்த [நீங்கதான் தமிழ் படமே பார்க்கிறது இல்லையே] குட்டிபாப்பா/ஜெயபிரகாஷ் உரையாடல் நிகழ்வு நிகழும் பின்னணி எனக்கும் நடந்திருக்கு..இங்கே சவூதியில் பேச்சுலராகவும்/பேமிலிமேனாகவும் இருக்கும்போது பக்கத்துவீடு/நண்பர்கள் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் குட்டீஸ்களை பார்த்துக்க சொல்லிவிட்டு தங்க்ஸ்களின் தலைகேசத்தை நீராட்ட உதவி ஒத்தாசையாய்போய்விடுவார்கள் [நானும்தான்]....இதே சீனை எப்படி பிடிச்சார்? அதை திறமையாக எப்படி கதைக்குள் வச்சாருன்னு தெரியல...அந்த சீனின் இறுதியில் மனைவி தலையில் துண்டோடையும்/ கணவன் நார்மல் உடையுடனும் வருவார்கள்.

[பின் குறிப்பு [பொதுநலம் கருதி வெளியிடுவது பொதுநால பொக்சு ;-

சமீபத்தில் நெருங்கிய நண்பர் குழந்தைகள மேய்ச்சுகிட்டு இருக்கிறப்போ..பயபுள்ள ரொம்பநேரம் ஆகியும் வரல. என்னடானு பார்த்தா ஆயில்பாத் எடுத்தகையோட ஆலிங்கனம் வேற...
அன்னார் அறைமயக்கம்/மனைவிக்கு ஜன்னி...சோ ஆயில்பாத் எடுத்துட்டு ஆலிங்கனம் செய்யாதீங்க மக்களே...]

கதை:-

மதுர-செல்லூர்ல காம்பௌண்ட்ல குடியிருந்த கட்டிளம்காளை பாண்டிக்கும்/திம்சுக்கு ட்டொடைய்ங்...இதை எதோச்சயாய் பார்த்த எனக்கு இரு தரப்பிலிருந்தும் ராஜமரியாதை..வீட்டில் சொல்லாம இருப்பதுக்கு லஞ்சம்--டீக்கடை பட்டர்பன்/சீய்யமாகவோ இன்னபிற மைதாவஸ்துக்களாகவோ பாண்டி மூலமாகவும்,காந்தி தாத்தா திம்சு மூலமாகவும் வர தொடங்கிச்சு.
ப்ப்பளார்...ப்ப்பளார்...எஸ்..லஞ்சம் வாங்கினா உம்மாச்சி கண்ணகுத்தும் என்பதை தெளிவாக இப்பவரை கடைப்பிடிப்பதால் வற்புறுத்தி திணிக்கப்பட்ட அன்பளிப்பை ஏற்றுக்கொண்டேன்...
கொஞ்சநாள் கழிச்சு பூனைக்குட்டி வெளியில வந்து திம்சு மெட்ராசுக்கும்/பாண்டி மட்டபாறைக்கும் கல்யாண கயித்தில் கட்டபட்டாங்க....

இதே மாதிரி சம்பவத்த அமரர் சுஜாதா – ஓலைபட்டசோ/ஊசிவெடியோன்னு சிறுகதையா எழுதி இருப்பாரு...சின்னபையன் மொட்ட மடியில கிடக்கிற பால்ல எடுக்க போறப்ப அங்கே பக்கத்துக்கு வீட்டு தாத்தா/வேலைக்கார பெண்ணை மசாஜ் செய்யுறத பார்த்திடுவான்..வீட்ல சொல்லதான்னு கிழவாடி லஞ்சலாவண்யம் கொடுக்கும்....தீபாவளி நெருங்குற சமயத்தில ஓலை பட்டாசு வாங்குறேன்னு ஜம்பமா சவால் விட்டுட்டு கிழவர் வீட்டுக்கு போறப்ப கிழவரின் மனைவி விஷயம் தெரிஞ்சு போட்டு தாக்கிக்கிட்டு இருக்கும். இதை பார்த்தவுடனே பொடியன் ஒ..ன்னு பெருங்குரல் எடுத்து அழுவான்...கிழவி சொல்லும் நீங்க பண்ணுண்ண வேலைக்கு புள்ள அழுகுறான்னு சொல்லி அதிரசம் தரும்.

சோ நீங்கள் ஜல்லியடித்தல்/கொசுவத்தி சுத்துதல் போன்ற பதங்களை உபயோக படுத்தமாட்டீர்கள் தானே குருஜி.

அன்பின்,

மாரக்கோரன்..